Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

10 பிப்ரவரி 2011

நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்


கோவில் என்பது இறைவன் உறையும் இடம். கோ என்றால் அரசன். இல் என்பது இருப்பிடம். ஆக, அரசர்கரசனான இறைவன் எழுந்தருளியுள்ள இடம் திருக்கோயில் என்று அழைக்கப்பெறுகிறது. இதனை ஆலயம், தேவாலயம், தேவஸ்தானம், தேவமந்திரம் என்கிற பெயர்களாலும் பரவலாக அழைக்கிறோம். ஆலயம் என்றால் ஆன்மா ஒடுங்கி நிற்கும் இடம் என்று பொருள் கொள்வர்.

பசுவின் உடலெங்கும் பரந்தோடும் குருதியானது முலை வழியே பாலாகச் சொரிதல் போல உலகெங்கும் பரவியிருக்கிற இறையருளானது திருக்கோயிலாகிய வழியினூடே சிறப்பாக வெளிவரும் என்பது ஆன்றோர் கருத்து. இதனால் ‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள். பல ஊர்களை நோக்கின் அவ்வூருக்கே கோயில் தான் பெருமையையும் சிறப்பையும் கொடுக்கிறது. காஞ்சி, மதுரை, கும்பகோணம் என்றெல்லாம் சொல்லுகிற போது எப்போதுமே கோபுரங்களும் மணியோசையும் உத்ஸவங்களும் தான் ஞாபகத்திற்கு வரும்.
வேறு எத்தனை எத்தனை சிறப்பிருந்தாலும் அத்தனையையும் மிஞ்சிய சிறப்பாக கோயில்களே விளங்கக் காண்கிறோம். நமது தமிழகமாகட்டும் ஏன்? வட இலங்கையாகட்டும் அடையாளமே கோயில் கோபுரம் தான். தமிழகத்தின் அடையாளச் சின்னமாக ‘கோதை பிறந்த ஊர்.. கோவிந்தன் வாழும் ஊர்..’ என்று போற்றப்படும் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரம் தானே நிமிர்ந்து நிற்கிறது.
sri_villiputhur_1860
எனவே, இத்தகு கோயில்கள் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் இன்றைக்கெல்லாம் பார்க்குமிடம் எங்கும் ஓரே கோயில்களாக இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கோயில்களில் எல்லாம் ஒவ்வொரு பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்கள்.
சிவாலயங்கள் பலவும் நவக்கிரக ப்ரீதிக்கான ஸ்தலங்களாக மாறிப் போயிருக்கின்றன. சில இடங்களில் எல்லாம் மூலவராக இருக்கிற ஸ்வாமி, அம்பாளுக்கு கொடுக்கப்படுகிற முதன்மையைக் காட்டிலும் நவக்கிரஹ தேவர்களுக்கும் இத்தகு மூர்த்திகளுக்குமே அதிக முதன்மை வழங்கப்பட்டு வருகிறது.
இப்படியாக நமது கோயில் வழிபாடு மிகவும் சிக்கலான நிலையை அடைந்து வருகிறது. மகர விளக்கு தரிசனத்தின் போது சபரிமலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஜடாயு அவர்களின் கட்டுரையை பார்த்த போது இதனுடைய பாரியளவு தாக்கத்தை காண முடிந்தது.
கோயில்களின் வகைகள்
கோயில்களை முக்கியமாக மூன்று வகையாகப் பிரித்து நோக்குவர். கேவலாலயம், சங்கீர்ணாலயம், மிச்ராலயம் என்பன அவையாகும். கேவலாலயம் என்பது இறைவனுக்காக மட்டும் தனித்து அமைந்துள்ள கோயில்கள். இவ்வாறான கோயில்களை உத்தர பாரதத்தில் அதிகளவில் காணலாம். உதாரணமாக காசியை எடுத்துக் கொண்டால் அங்கேயுள்ள விஸ்வநாதராலயம் தனித்து சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயமாக அமைந்திருக்கின்றமையைக் காண்கிறோம்.
இறைவனும் இறைவியும் மட்டும் எழுந்தருளியிருக்கிற ஆலயம் மிஸ்ராலயம் ஆகும். இறைவன், இறைவி பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளியிருக்கிற ஆலயம் சங்கீர்ணாலயம். தென்னிந்தியாவில் பொதுவாக இத்தகு ஆலயங்களை நாம் காண முடிகிறது. உதாரணமாக மதுரை மீனாட்சியம்பாள் ஆலயம் என்றால் மூல மூர்த்திகளாகிய மீனாட்சி சுந்தரேஸ்வராளைத் தவிர பரிவார மூர்த்திகளாகிய பல்வேறு விநாயகர், முருகன், இறைவனின் பல்வேறு வடிவ மூர்த்திகள், நாயன்மார்கள் என்று பல மூர்த்திகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
கோயில் கட்டட அமைப்பில் நாகரம், வேசரம், திராவிடம் என்கிற மூன்று வகைகளை இனங்காணலாம். நாகரம் என்பது கீழிருந்து சற்சதுர அமைப்பிலேயே உயர்ந்து காணப்படுவது. இதனை வட இந்தியாவில் அதிகம் காணலாம். வேசரம் என்பது வட்ட வடிவானது. இன்றைக்கும் இலங்கை போன்றவற்றில் உள்ள பௌத்த விகாரைகளை இவ்வமைப்புடன் ஒப்பு நோக்கலாம்.
திராவிடம் என்பது நமது தென்னகத்தில் அமைந்துள்ள பொதுவான அனைத்துக் கோயில்களினதும் கட்டட வடிவமைப்பாகும். கருவறைக்கு (மூலாலயத்திற்கு) மேல் அமைந்திருப்பதை இலங்கையில் ஸ்தூபி என்றே வழங்குவர். இதனை பொதுவாக விமானம் என்று கூறுவர். விசேஷமாக அளந்து அமைக்கப்படுவது என்பது இதன் பொருள். தேர் முதலிய ஊர்திகளைப் போல அழகாக அமைக்கப்படுவதால் இதற்கு விமானம் என்று பெயர் வந்திருக்கலாம்.
எவ்வளவு பெரிய கோயிலாக இருப்பினும் சிறிய கோயிலாக இருப்பினும் எல்லா இடத்தும் கருவறை அமைப்பு பொதுவாக ஒரே நிலையிலேயே அமைந்திருக்கக் காண்கிறோம். கோயில்களை அவற்றின் கட்டட அமைப்பின் அடிப்படையில் அதிலும் முக்கியமாக விமானத்தின் அடிப்படையில் பலவாறாகப் பகுப்பர். திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம் ஒன்றில்,
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழல் கோயில்
கருப்பறில் பொருப்பனைய கொகுடிக்கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழந்து
தாழ்ந்திறைஞ்ச தீவினைகள் தீருமன்றே
என்று கோயில்களின் வகைகளை வகுத்து தெளிவாகக் குறிப்பிடுவார். இப்பதிகத்தில் கரக்கோயில், ஞாழல் கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில். ஆலக்கோயில் என்பனவாய ஆறு வகைகள் குறிப்பிடப்பெற்றுள்ளன.
எனவே 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே பல்வேறு வகையான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டிருந்த கோயில்கள் தமிழகத்தில் பரவியிருந்தன என்று கருதலாம். இன்றைக்கும் கஜப்ருஷ்ட (ஆனைவடிவில் அமைந்த) விமானத்தை கொண்ட கோயில்களை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணலாம்.
கருவறையில்  உறையும் கற்பகம்
இறைவனின் மூலவிக்கிரகம் எழுந்தருளியிருக்கிற இடம். மூலஸ்தானம் அல்லது கரு- அறை என்று சொல்லுவார்கள். கர்ப்பகிரஹம் என்கிற பெயராலும் அழைப்பர். இக் கருவறைக்கு முன்னே அடியவர்கள் நின்று வழிபடக் கூடிய மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை மகாமண்டபம் என்பர். இந்த மகாமண்டபமும் கருவறையும் முற்காலத்தில் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டிருந்திருக்கிறது. இன்றைக்கும் காஞ்சி கைலாஸநாதர் ஆலயத்தில் அவ்வாறிருக்கக் காணலாம். பிற்காலத்தில் இவ்விரண்டையும் இணைத்தனர். அதன் நடுப்பகுதியில் அமைந்த சிறிய மண்டபம் அர்த்தமண்டபம் என்று கூறப்படும்.
kanchikailasanatha
இம்மூன்று மண்டபங்களுமே கோயிலின் எழுச்சியின் முதற் கட்டம். பின்னர் படிப்படியாக விரிந்து பல்வேறு மண்டபங்கள் எழுந்திருக்கின்றன என்று கொள்வதற்கு இடமுண்டு. இம்மண்டபங்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பரிணாமத்தில் கருவறையைச் சுற்றியும் எழுச்சியுறும் போது பிரகாரங்கள் உருவெடுத்தன.
பொதுவாக கருவறை என்ற கர்ப்பகிருஹத்தின் மூன்று பக்கமும் அடைக்கப்பட்டிருக்கும். வெளிச்சுவரில் பஞ்சகோஷ்டங்களையும் (மாடங்களையும்) பல இடங்களில் அமைத்திருப்பார்கள். இவற்றிலும் மூன்று மாடங்களே பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது என்று நான் கருதுகிறேன். தெற்கு கோஷ்ட(மாடத்தில்) சிவபெருமானின் குரு வடிவமான தட்சணாமூர்த்தி, மேற்குக் கோஷ்டத்தில் மஹாவிஷ்ணு மூர்த்தி, வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மா என்பதாகவே இவ்வமைப்பிருக்க வேண்டும்.
இவ்வாறான கோஷ்ட அமைப்பு பழங்காலத்தில் விஷ்ணுகோயில்களிலும் இருந்து வந்திருப்பதாகவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சோழர்காலத்தில் சிவாலயங்களில் மேற்கு மாடத்தில் அமையப் பெற்றிருந்த விஷ்ணுமூர்த்தி எடுக்கப்பட்டு லிங்கோத்பவர் என்கிற சிவவடிவம் ஸ்தாபிக்கப்பட விஷ்ணுவாலயங்கள் பலவற்றிலும் சிவப்பிரதிஷ்டையே இல்லாமற் போய்விட்டது என்று சிறியேன் கருதுகிறேன். இது இந்து ஒற்றுமைக்கு பெரும் பாதகமான அம்சமாகும். இயலுமாகில் இது பற்றி அறிஞர்கள் சிந்தித்து பழைய நிலையில் மும்மூர்த்திகளும் கருவறையை சுற்றி அமைகிற வழக்கத்தை மீள உருவாக்கில் சிறப்பாகும்.
சிவாலயங்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சிவபெருமானின் கருவறைக்கு இடப்பக்கமாக அம்பாளுக்குரிய கருவறை தெற்கு நோக்கி அமைந்திருக்கும். இரண்டு கருவறைகளுக்கும் மகாமண்டபம் பொதுவாகவே இருக்கும். சில இடங்களில் மட்டும் மாறுபாடுகள் உண்டு. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக் கோலம் பூண்டிருப்பதால் சுவாமி கருவறைக்கு வலப்புறமாக அங்கயற்கண்ணியின் கருவறை அமைந்திருக்கிறது. காஞ்சியில் காமாட்சியம்பாள் ஆலயம் ஏகாம்பரேஸ்வரஸ்வாமி ஆலயத்திலிருந்து சற்று விலகி தனித்துவ அம்சங்களோடு சிறப்பாக அமைந்திருக்கிறது.
வைஷ்ணவ ஆலயங்களில் தாயார் சந்நதி பெருமாள் சந்நதிக்கு வடக்காக அமைந்திருப்பதே வழக்கம் எனிலும் சில இடங்களில் சில சிறப்புக்களை முன்னிட்டு சில மாற்றங்களையும் காணலாம். திருப்பதியில் வேங்கடவனுடைய பட்டத்தரசியாகிய அலமேல்மங்கை திருச்சானூரிலேயே தனிக்கோயில் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.
கருவறையை நம்முன்னோர்கள் பல்வேறு நுணுக்கங்களுடன் அமைத்தனர். அதிஷ்டானம் என்பது கருவறையின் அடிப்பகுதி. பாதம் என்பது கருவறை. மஞ்சம் என்பது தளவரிசை. இதை பிரஸ்தரம் என்றும் சொல்வர். அதன் மேல் இருப்பது கண்டம். ஐந்தாவது பண்டிகை. இதன் மேல் இருப்பது ஸ்தூபி. ஸ்தூபியில் கலசம் என்ற கருவறையின் திருமுடி- மகுடம் அமைந்திருக்கும். கோயில்களை மரம், செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் என்பவற்றைக் கொண்டு பழங்காலத்தில் ஆக்கினர்.
மண்டபங்கள் நிறை அழகுக் கோயில்
அப்பர் பெருமான் ‘திருக்கோயில் இல்லாதது திரு இல் (செல்வம்- சிறப்பு இல்லாத) ஊர்’ என்பார். இதனை அறிந்து தான் நம்மவர்கள் உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கே தம்மால் இயன்ற அளவில் கோயில்களை எழுப்பி வழிபாடாற்றி வருகிறார்கள். இன்றைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா. ஜேர்மன், கனடா, நியூசிலாந்து, மலேசியா. தாய்லாந்து, தென்னாபிரிக்கா, என்று எங்கு சென்றாலும் இந்தத்திருக்கோயில்களைக் காண்கிறோம்.
அந்த அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் கோயிலை எவ்வளவு தூரம் சிறப்பாக பெரிதாக அமைக்க இயலமோ? அத்தகு வண்ணம் அமைத்து வருகிறார்கள்.
lemont_rama_temple
பல்வேறு ஐரோப்பிய தேசங்களில் வெறிச்சோடிப்போய் கிடந்த கிறித்துவ தேவாலயங்கள் பல கூட நம் இந்து அன்பர்களின் வருகையால் சிவ- விஷ்ணு நாமம் ஒலிக்கும் திருக்கோயில்களாக மாறியிருக்கின்றன.
கோயில் அமைக்கப்படுவதற்கு முன்னர் அத்திவார கிரியை இடம்பெறும். இதனை இஷ்டக ந்யாசம் என்றும் கூறுவர். இதன் போது கிரியாபாவனையுடன் கோயிற் கட்டுமானம் ஆரம்பமாகும். இக் கோயில் கட்டுமானத்தை எப்படி எவ்வாறான செங்கல்லை முதலில் வைத்து ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு ஆகமக் குறிப்புகள் உள்ளன.
செங்கல்லும் மரமும் இணைத்தே முற்காலத்தில் கோயில்களை உருவாக்கினர். இன்றைக்கம் கேரளாவில் இவ்வாறான கோயில்களை காணலாம். தென்னிலங்கையில் உள்ள கதிர்காமமும், இமயமலைப்பகுதிக் கோயில்களும் கூட இவ்வாறானவையேயாகும். திருக்கோயில்களில் பல்வேறு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
இவற்றில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், துவஜாரோஹண (கொடியேற்ற) மண்டபம், சஹஸ்ரதம்ப (ஆயிரங்கால்) மண்டபம், சோடச ஸ்தம்ப (பதினாறு கால்) ஸ்தம்பமண்டபம், ஸ்நபன (திருமஞ்சன) மண்டபம், இரதாரோஹண (தேர்விழா) மண்டபம், வசந்தமண்டபம், புராணபடனமண்டபம், யாகமண்டபம், ஆகமமண்டபம், வாத்யமண்டபம், நிருத்ய மண்டபம் போன்றவை முக்கியமானவை. ஆலயத்திற்கு தக்க வகையில் வேறு வேறு சிறப்பிற்குரிய மண்டபங்களும் அமையப்பெறலாம்.
சிவாலயங்களில் முற்காலத்திலிருந்து விநாயகர் முதல் சண்டேஸ்வரர் ஈறாக உள்ள மூர்த்திகளுக்கு உரிய உரிய இடங்களில் சிற்றலாயங்கள் (சந்நதிகள்) அமைக்கப்படும். பிற்காலத்தில் நவக்கிரஹ சந்நதியும் இணைக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாகிலும் ப்ரதான இறைவனின் சிறப்பிற்கு நவக்கிரஹம் முதலிய பரிவாரமூர்த்தி சந்நதிகளால் பங்கம் உண்டாகாமல் கவனித்துக் கொள்வதும் அவசியம்.
கோயில்களுக்கு அழகு சேர்ப்பதில் தூண்களின் பங்கு பெரியது. சிற்பிகளின் கலைநயம் பொலியும் இத்தூண்களில் அழகு மிக்க சிற்ப செதுக்கல் வேலைப்பாடுகள் அமைந்திருக்கும். தென் நாட்டில் - தமிழகத்தில் பாதபந்தம், குமுதபந்தம், பத்மபந்தம், ரத்னபந்தம், பட்டபந்தம், கம்பபந்தம் போன்ற அமைப்புகள் இவற்றில் இடம்பெற்றிருக்கும். தூணின் அடித்தளமும் மேற்தளமும் ஒரே வகையிலிருக்கும். அதாவது பொதுவில் சதுர- வட்ட வடிவில் இருக்கும். பெரிய தூணுடன் சிறிய தூண்கள் சிலவற்றையும் சேர்த்தும் அமைத்திருப்பர். தூண்களில் யாளிகளும்- குதிரைகளும்- சிங்கங்களும் திறம்பட அமைக்கப்பட்டிருக்கும்.
சிவாகமங்களின் விதிப்படி அமைக்கப்பெறும் கோயில்களில் ஈசானத்தில் திருமஞ்சன கிணறும், தென் கிழக்கில் பாகசாலை, பொக்கிஷசாலை என்பனவும், தெற்கில் திருக்குளமும், வடக்கில் பள்ளியறையும் ஈசானத்தில் யாகசாலையும் அமையப்பெறும். இவற்றில் கோயில்களுக்கு ஏற்ப மாற்றங்களும் ஏற்படுவதுண்டு.
அறப்பணி நிலையங்கள்
கோயில்கள் வெறுமனே தெய்வீக வழிபாட்டிற்கான இடங்களாக அமையாமல் கலை பண்பாட்டு காவலரண்களாகத் திகழ்ந்திருக்கின்றன. மருத்துவ நிலையங்களாகவும் கல்விக்கூடங்களாகவும்- அமைந்திருந்தன.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் குருக்கள் மற்றும் வைத்தியர், ஜோதிஷர், பரிசாரகர், போன்றவர்களுக்கு இருப்பிடம் கொடுத்து வாழச் செய்திருக்கிறார்கள். கோயிலின் மேற்பாகத்தில் வைத்தியநிலையமும் தென் மேற்கில் கோசாலையும் வடக்கில் கல்விச்சாலையும் வடகிழக்கில் நெற்களஞ்சியமும்- வேதாத்யாயன பாடசாலையும் அமைக்க வேண்டும் என்றும் சில ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
mahalakshmi
சிற்ப – சித்திரக் களஞ்சியமாக கோயில்கள் திகழ்ந்திருக்கின்றன. தஞ்சை பிரகதீஸ்வரர் (பெருவுடையார்) கோயில் இதற்குத் தக்க சான்று. இது போலவே கோயில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று இசை வளர்க்கப்பட்டிருக்கிறது. இன்றும் இது தொடர்கிறது. உரிய உரிய உத்ஸவங்களுக்கு உரிய உரிய வாத்யங்கள் வாத்தியங்கள் இசைக்க வல்லாரால் இசைக்கப்பெற்றிருக்கின்றன.
உருத்திரகணிகையர் அல்லது தேவதாசியர்கள் நடனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் பற்றி தற்காலத்தில் தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் விஜய நகர அரசுக்கு (முகலாயர் காலத்திற்கு) முன் இவர்கள் மிகச்சிறப்பான ஒழுக்கக் கட்டமைப்புடன் கூடிய இறை பணிக்கான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.
இது போலவே திருமாலை தொடுக்கும் பணிகள் போன்றனவும் கோயிற் சுற்றாடலில் இயல்பாக நடைபெற்றுள்ளன. இன்னும் தொடர்கின்றன. கோயிலில் நந்தவனம் அமைத்து அவற்றை பராமரிப்பதம் வழக்கம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தல விருட்சம் நிச்சயமாக அமைந்திருக்கும்.
இன்றைக்கு தலவிருட்சங்களில் நேர்த்திகள் என்று பட்டாடைகளை அளவுக்கு அதிகமாக சுற்றி- அவற்றைச் சுற்றிலும் கொட்டகைகள் அமைத்து- அவற்றின் இயற்கைத் தன்மை பாதிக்கப்பட்டு வருவதும் இவ்விடத்தில் சிந்திக்க வெண்டியது. இயற்கை தான் கோயிலுக்கு அழகைத் தருகிறது.
ஏழு மலை திருப்பதிக்கு அழகு. அலையெறி கடல் தான் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூருக்கு அழகு. காடும் மலையும் தான் பழநிக்கும் சபரிமலைக்கும் திருவண்ணாமலைக்கும் அழகு. ஆக, இவற்றின் இயற்கையை அந்த இயற்கையில் நிறைந்திருக்கும் இறைவனை காண- சிந்திக்க போற்ற இயலாமல் அவற்றுக்கு பெரும் இடையூறுகளாக செய்படுவது கோயில்களின் புனிதத்துவத்தையும் இயற்கைத் தன்மையையும் சீரழித்து விடும்.
வாவென்று அழைத்து வரமருளும் வள்ளல்
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலை வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
என்பது திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி. கோயிலை வணங்கி என்று இங்கே ஆழ்வார் குறிப்பிடுகிறார். இறையுருவமான கோயிலை வணங்குவது கோமகளை வணங்குவதற்கு ஒப்பாகும் என்பத இதில் காட்டப்படும் கருத்தாகக் கொள்ள இயலுமல்லவா?
இத்தகு கோயிலை நோக்கி தூரத்தே வரும் போதே வா வா என்று கூவி அழைப்பது மணியோசை. ஆதற்கு அடுத்ததாக உயரத் தரிசனம் தந்து நம்மிடம் வம்மின் என்று சொல்லி நிற்பது ‘ஸ்தூல லிங்கம்’ என்ற கோபுரம். இதன் சிறப்புக் கருதியே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொன்னார்கள். சில கோயில்களில் பல்வேறு கோபுரங்கள் அமையப்பெற்றிருக்கும் . திருவண்ணாமலை. மதுரை, ஸ்ரீரங்கம் போன்றவற்றில் இவ்வாறு காணலாம்.
பொதுவாக நடுவே அமைவதை மத்யகோபுரம் என்றும் பிறவற்றை தென்கோபுரம், மேற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரம், வடகோபுரம் என்று அழைப்பர். தனித்துவமான சிறப்புப் பெயர்களால் அழைப்பதும் உண்டு. பிரகாரத்திற்கு ஒன்றாக கோபுரங்களை அமைக்கும் வழக்கமும் இருக்கிறது.
வானாளாவ தென்னகத்தே சிற்ப-சித்திரக் களஞ்சியமாக எழுந்து, வளர்ந்து கோபுரங்கள் நிற்கின்றன. இந்துக்கள் மூலாலயத்திலும் சந்நதிகளிலும் எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ள மூர்த்திகளில் மட்டுமன்றி கோயிலையே இறையுருவமாகக் காண்கிறார்கள். அதிலும் விமானம், கோபுரம் இரண்டும் முழுக்க முழுக்க கடவுளுருவாகவே போற்றப்படுவது. இதனாலேயே கும்பாபிஷேக சமயத்தில் முக்கியமாக பூஜிக்கப்பெற்று இறை சாந்நித்யம் உருவாக்கப்பெற்ற கும்பங்கள் விமான மற்றும் கோபுர கலசங்களுக்கு அபிஷேகிக்கப்படுகின்றது.
Popular Temples
எனவே தான் சைவர்கள் ஸ்தூல லிங்கம் என்று கோபுரங்களைப் போற்றுகிறார்கள். அதாவது மூலாலயத்தில் உள்ள சூட்சூமலிங்கத்தின் மறுவடிவம் கோபுரம். பிரதிஷ்டை செய்யப்பெற்று- கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பெற்ற கோபுரத்தினை பாலஸ்தாபனம் செய்கிற போது படவிம்பத்தில் ஸ்தாபித்த பின்பே கோபுரத்தில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்கிற வழக்கம் இருக்கிறது.
ஆனால் தற்போது சில தமிழ்ச்சினிமாக்களில் பாடுவதற்கும் ஆடுவதற்கும் சாய்ந்து நிற்பதற்கும் உரிய இடமாக- கோபுரத்தைக் காட்டி விடுகிற வேதனையைப் பார்க்கிறோம். தேவையற்று- கோபுரங்களில் ஏறக்கூடாது. பிரதிஷ்டிக்கப்பெற்ற கோபுரத்தில் தவிர்க்க இயலாத வகையில் ஏறுபவர்கள் ஆஸ்தீகர்களாக –தீட்சை பெற்றவர்களாக அமைய வேண்டும் என்றும் அவர்கள் ப்ரார்த்தனை செய்து கொண்டு தெய்வ காரியத்தின் பொருட்டு மாத்திரம் கோபுரங்களில் ஏறலாம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
இதனை நாம் இன்றைய சூழலில் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த விதியை கூட மூலாலய விமானங்களுக்குப் பொருத்தமாகக் கருதக் கூடாது.
சிவாலயங்களை விட வைஷ்ணவாலயங்களில் விமானங்களுக்கு மேன்மையும் சிறப்பும் இன்னும் இன்னும் அதிகம். ஸ்ரீரங்கம்- ப்ரணவாக்ருதி விமானம், கும்பகோணம் வைதீகவிமானம், ஒப்பிலியப்பன் கோயில்- சுத்தானந்த விமானம், திருக்கண்ணபுரம்- உத்பல விமானம், திருக்கூடலூர்- அஷ்டாங்க விமானம், அழகர்கோயில்- சோமசுந்தரவிமானம், திருமோகூர்-கேதகி விமானம் (சதுர்முக அமைப்பினது), காஞ்சி வரதர் கோயில்- புண்ணியகோடி விமானம், திருமலை- ஆனந்த நிலையம் என்றெல்லாம் கோயில்களில் உள்ள மூல விமானங்கள் பெருமையுடனும் சிறப்புடனும் போற்றப்பெறுகின்றன. எனவே விமானங்கள் (ஸ்தூபிகளின்) சிறப்புகளை அறிந்து பேண வேண்டும்.
கோபுரங்களும்- விமானங்களும் சிறப்புப் பெறுவது போல உயர்ந்து நின்று பெருமையோடு திகழ்வது துவஜஸ்தம்பங்கள் என்ற கொடிமரங்கள். மூங்கில், கருங்காலி, வில்வம், தேவதாரு, பலாசு, தென்னை. தாலம், ஹிந்தாலம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மரத்தால் ஆக்கப்பட்டு செப்பு,வெள்ளி, தங்கம் என்ற ஏதாவது ஒரு உலோக தகட்டினால் மூடப்பெற்று சிற்ப எழிலுடையதாக கொடிமரங்கள் விளங்கும். இதன் அடியிலேயே எண்சாண் உடம்பும் நிலத்தில் தொடுகையுறும் வகையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிற வழக்கம் இருக்கிறது.
உற்சவங்களின் போது கொடிமரத்தில் கொடியேற்றப்பெறும். அக்காலத்தில் சகல தேவ-தேவியரும் கொடிமரத்தில் எழுந்தருளச் செய்யப்பெற்று விசேடமாகஆராதிக்கப்பெறும்.
கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்கள்
புதுமைகள் அவசியமானவை. பழமையை கவனத்தில் கொண்டு புதுமைகளையும் உள்வாங்குவது சிறப்பு. பழைய கோயில்களில் மண்டபங்கள் தோறும் சட்டவிளக்குகள் என்று வாசலினைச் சுற்றி விளக்குகள் வைக்கப்பெற்றிருக்கும். தற்போது சில இடங்களில் வசதிகருதி அவற்றை நீக்கி விடுகிறார்கள். மின்சார ஒளியூட்டுகிறார்கள். மின்சாரம் இல்லாத காலத்தில் போல விளக்குகள் எல்லாவிடத்தும் நிறைந்திருப்பதால் எங்கும் தூய்மையின்மை உண்டாகலாம் ஆயினும் விளக்கு ஒளியின் அழகு.. அருள் எழுச்சியை மின்சாரம் தராது என்பதும் கவனிக்க வேண்டியது.
கோயில் சந்நதி வாசல்களில் பாரிய மரத்தாலான கதவுகளை அமைக்கிற போது அருகே வசதியுள்ள போது இரும்புக் கதவுகளையும் அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அர்ச்சகர் சிறிது விலகிச் செல்கிற போது கூட வரும் பக்தர்கள் இறை தரிசனம் செய்ய அது வசதியாக அமையும்.
கருவறையின் கோமுகம் வழியாக வருகிற அபிஷேகஜலத்தை பிரசாதமாக ஏற்கிற வழக்கம் தமிழகம் மற்றும் இலங்கையில் சில இடங்களில் உண்டு. இவை கூட ஏற்கத்தக்கதன்று. எனினும் கும்பாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் மட்டும் இதனை ஒழுங்கமைத்துச் செய்யலாம். அபிஷேகதீர்த்தத்தை குருக்கள் உரிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அவர் தரும் போது பெற்றுக் கொள்வதே சிறப்பு.
தற்போது மாபிள் மற்றும் தராஷோ முதலியவற்றை கோயில் தளங்களில் பதிக்கிறார்கள். ஆனால் இதனால் கருங்கல்லில் நமது பாதம் பதியாது தடுக்கப்படுகிறது. கருங்கல்லில் பாதம் பட்டால் அது மருத்துவ ரீதியான நலங்களைத் தரும் என்று சொல்வார்கள். எனவே, இதனைப் பற்றியும் புதிய எண்ணங் கொண்டவர்கள் சிந்திப்பது சிறப்பு.
கோயில்களுக்குப் போகும் போது அடியவர்கள் அதற்குரிய உடையோடுதான் போக வேண்டும். திருச்செந்தூருக்கு- குருவாயூருக்கு- ஏன் எந்த ஒரு இலங்கையிலுள்ள கோயிலுக்கு செல்ல நேரிட்டாலும் ஆண்கள் மேலங்கி இன்றியே உட்பிரவேசிக்க முடியும். சென்ற ஆண்டு யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தஸ்வாமி தேவஸ்தானம் இது குறித்து ஒரு பகிரங்க அறிவித்தல் செய்தது. அதில் ஆண்கள் வேட்டியணிந்து மேலங்கியின்றி வரவேண்டும் என்றும் பெண்கள் யாவரும் சேலையணிந்து தான் வர வெண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. எனினும் சிலரின் கோரிக்கையை ஏற்று சுடிதார் என்கிற பஞ்சாபி உடையும் அனுமதிக்கப்பெற்றது. திருமலை- திருப்பதி தேவஸ்தானமும் இது குறித்து அண்மையில் ஒரு கோரிக்கை வெளியிட்டிருந்தது. ஆக, இந்துக்கள் கோயில் ஒழுங்கில் கட்டாயம் பேண வேண்டும். பாரம்பரிய உடையன்றி வேற்றுடை தரித்து கோயிலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வியாபார நிலையங்களை கோயிலுக்குள் வைத்திருப்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது. அது பூஜைப் பொருட்களாகிலும் சரி வேறு பொருட்களாகிலும் சரி ஸ்வாமி சந்நதி வாயிலில் வதை;து கூவி விற்றால் அது மிக வேதனையாக அமையும். எனவே புற வீதியில் ஒழுங்கு செய்யப்பெற்ற இடத்தில் மட்டுமே வியாபார நிலையங்கள் அமைய இடமளிக்க வேண்டும். தேவஸ்தானத்தின் பிரசாதம் கூட ஒரு ஒழுங்கமைக்கப்பெற்ற பிரத்யேக இடத்தில் அமைக்கப்பெற்ற விநியொக நிலையத்தில் விநியோகிக்கப் பெற வேண்டும்.
வசதியுள்ள கோயில்களில் அன்னதான மண்டபம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை தனியாக அமைத்துக் கொள்ள வேண்டும். திருமணங்கள் கோயிலுள் நடைபெறுகிற போது பண்பாடு பாதுகாக்கப்பெறுதல் அவசியம். இதே போலவே, ஷஷ்டியப்தபூர்த்தி முதலிய வைபவங்களை கோயில்களில் நடத்துகிற போதும் வழிபாட்டிற்கு இடையூறின்றிஅ து அமைய வேண்டும்.
கோயில்கள் பண்பாட்டின் நிலைக்களன்களாக- கலைகளின் வளர்ச்சிக்கு உதவுவனவாக- வைத்திய நிலையங்களாக- ஆன்மீக பயிற்சி நிலையங்களாக- கல்விச் சாலைகளாக பல் பரிணாம நிலையை தன்னகத்தே கொண்டு செயற்பட வேண்டும். கோயிலைச் சுற்றி இவ்வாறான அறப்பணி நிலையங்கள் அமைவதற்கு வழி செய்ய வெண்டும். கோயில்களில் தற்போது சுவாமி- அம்பாள் விக்கிரகங்கள் பல வகைகளில் அலங்கரிக்கப்பெறுகின்றன. ஹஸ்தம் (கை) பாதம் (கால்) வைத்து சாத்துப்படி செய்யும் போது அது இறையுருவத்தை சிதைக்காமல் அமைய வேண்டும். இறைவனின் திருவுருவில் சாத்தக் கூடாத பொருட்களினை வைத்து கட்டி அழகு செய்கிறோம் என்று செய்வது மகாபாவம். இலங்கையிலுள்ள கோயில்களில் 1950களில் அக்கால பெரியவர்கள் எடுத்த முயற்சியால் ஹஸ்த பாதச் சாத்துப்படி பெருமளவில் நிறுத்தப்பட்டு விட்டது. சிவஸ்ரீ.ச.குமாரசுவாமிக்குருக்கள் எழுதிய ‘மூர்த்தியலங்காரவிதி’ என்கிற நூல் விபரீத அலங்காரங்களால் ஏற்படக் கூடிய கேடுகள் பற்றி சிவாகம சான்றுகளோடு குறிப்பிடுகிறது. இது குறித்து பெருமளவில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
சிவாகமங்களில் நின்ற வடிவம் நின்ற வடிவமாகவே அலங்கரிக்கப்பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. போலிக் கரங்களும் பாதங்களும் இறைவனுக்குச் சாத்துவது குற்றமாகும். காமிகாகமத்தில் நடராஜமூர்த்தியை கல்யாணசுந்தராகவும் கல்யாண சுந்தரரை நடராஜராயும்.. சக்தியை சிவமாயும்.. சிவத்தை சக்தியாயும் அலங்கரிப்பது குற்றம் என்று இருக்கிறது. இது குறித்த வைஷ்ணவாகமங்களின் விளக்கம் அறியேன். ஆங்கே இதற்கு நிச்சயமாக தெளிவான செய்திகள் இருக்கும் என நம்புகிறேன். எது எவ்வாறாகிலும் மூர்த்தியலங்காரம் பற்றி மீளவும் பரிசீலித்து அவற்றை இத்துறை சார் வல்லுனர்கள்- சாஸ்திரம் அறிந்தவர்கள்- ஆகமம் கற்றவர்கள் தெளிவு உண்டாகும் வகையைச் செய்தல் வேண்டும்.
லட்சக்கணக்கில் பக்தர் கூட்டம், யார் பொறுப்பு?
sabrimala
  • கோவில்களில் கூட்டம் மிகுவது, அதைத் தொடர்ந்த அசம்பாவிதங்கள் குறித்த விழிப்புணர்ச்சி அந்தந்த தேவஸ்தான கமிட்டி மற்றும் மாநில அரசுகளிடம் உருவாக்கப் படுவது அவசியம்.
  • கோடிக்கணக்கில் கோவில் வருமானத்தை பராமரிக்கும் தேவஸ்தானங்களும், வருமானத்தில் பங்கு போட்டுக் கொள்ளும் அரசும் மட்டுமே அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • கிடைக்கும் வருமானத்தில் பக்தர்களின் வசதிக்காக ஒரு பகுதியை ஒதுக்குவது இவர்களின் கடமை.
  • கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தான் மிக திறமையான முறையில் பெரும் கூட்டத்தை சமாளிக்கும் முறை இருக்கிறது.
  • ஏனைய மற்ற கோவில்களில் இனியாவது திருப்பதியைப் பார்த்தாவது ஏற்பாடுகள் செய்து தருவதில் முனைப்புடன் இயங்க வேண்டும்.
  • பிரதமர் தலைமையில் இயங்குகிற National Disaster Management Agency அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சர் தலைமையில் இயங்கும் இது போன்ற அமைப்புகளும் செயலில் இறங்குவது அவசியம்.
  • இறுதியாக சபரிமலையில் நடந்தது போன்ற அசம்பாவிதம் நடந்தால், அது குறித்து ஆய்வு செய்து அதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை பதிவு செய்ய வேண்டும், மீண்டும் இது போன்று அபாயம் நிகழாமல் தடுக்க இது அவசியம்.
கோயில் சிறப்பாக இயங்குவதற்கு கோயில் அர்ச்சகர்- அறங்காவலர்- தினமும் சேவிக்க வரும் அடியவர்கள் ஆகிய மூவகையினரும் முக்கியமாக ஒன்று கூடி சிந்திக்க வேண்டும். ஆடம்பரம்- அலங்காரம் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தர முயலும் போது நமது வேதாகம அறிவுறுத்தல்களுக்கு அவை மாறாக அமையாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஆக, ஆலயம் என்பது இந்துக்களைப் பொறுத்த வரையில் அருளொளி வீசும் தெய்வீக நிலையங்கள். தெய்வத்தின் மறுவடிவங்கள். இறைவன் எழுந்தருளியிருக்கிற ஆலயங்களினை அதற்குரிய புனிதத்துவத்துடன்.. நவீன வகையான வசதிகளை உள்வாங்கி- அதே வேளை பழைமை- பண்பாடு- பகவத் சித்தம் இவற்றை மனங்கொண்டு புனரமைத்துப் பேணி செவ்வனே வழிநடத்துவது அவசியம்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காணா மணிவிளக்கே (திருமந்திரம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக