Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

11 நவம்பர் 2012

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 12 : முரண்பாடுகளும், திரிபுகளும் தொடர்ச்சி…

11/11/2012

முரண்பாடு: 5
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசூரனுக்கு (திராவிட தலைவனுக்கு) வாழ்த்துக்கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காகத் துக்கப்பட வேண்டியதை விளக்கித்துக்க நாளாகக் கொள்ளவேண்டும்.
(விடுதலை 17-10-1965)
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த பேச்சை படிக்கின்ற போது நமதுக்கே சிரிப்புதான் வருகின்றது. ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கிருஷ்ணர் கதை ஒரு கட்டுக்கதை, புராணங்கள் கட்டுக்கதை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வந்தார். அவர் வாதப்படி கிருஷ்ணன் கதை கட்டுக்கதை என்றால் நரகாசூரனும் கட்டுக்கதைதான். நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும்பட்சத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் கட்டுக்கதையாகதான் இருக்கும்.
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார்?
krishna-kills-narakasura 
நரகாசூரன் கொலைக்காக துக்க நாளாகக் கொள்ளவேண்டுமாம்! நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும் போது எதற்காக துக்கநாளாக கொள்ளவேண்டும்? நடக்காத சம்பவத்திற்கு துக்க நாளாக கொள்வதுதான் பகுத்தறிவா?
உண்மையிலேயே கிருஷ்ணனால் நரகாசூரன் கொல்லப்பட்டால் தானே துக்கநாளாக இவர்கள் சொல்லமுடியும்? துக்க நாளாக கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் என்றால் அந்த புராணக்கதை உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பதை நம்பிதானே இவர் இப்படி சொல்கிறார்?
ஒரு இடத்தில் புராணங்கள் நடந்த, உண்மையான வரலாறுகள் அல்ல என்கிறார்.
மற்றொரு இடத்தில் நடக்காத சம்பவத்திறாக (இவர் வாதப்படி) துக்க நாளாக கடைபிடிக்க சொல்கிறார். என்னே ஒரு முரண்பாடு!
முரண்பாடு :6
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது.
(விடுதலை 26-01-1943)
அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
இராமாயணம் – வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூது வாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக்காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதை தொகுப்பாகும்.
(விடுதலை 17-10. 1954)
எவ்வளவு முரண்பாட்டைப் பாருங்கள்.
முதலில் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று கூறுகிறார்.
இரண்டாவது, திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூது வாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக்காட்ட உருவானது என்று கூறுகிறார்.
இதில் எது உண்மை?
முரண்பாடு : 7
இராமாயணம் நடந்த சம்பவம் அல்ல. இராமர் சரித்திர புருஷரும் அல்ல என்று இராமாயண குறிப்புகள் என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார். இராமாயணம் என்பது ஒரு கட்டுக்கதை என்றெல்லாம் பேசினார்.
ஆனால் அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார் :-
சகோதரர்களே! உங்கள் இழிவு அதாவது, தாழ்ந்த ஜாதித்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேத காலத்தில் இருந்திருக்கின்றது. அரிச்சந்திரன் காலத்தில் இருந்திருக்கின்றத. ராமன் காலத்தில் இருந்திருக்கின்றது. எல்லா ஆழ்வார் நாயன்மார் காலத்திலும் இருந்திருக்கின்றது.
(குடியரசு 11-01-1931)
இராமாயணம், இராமர் என்பதெல்லாம் நடந்த சம்பவம் அல்ல, கட்டுகதை என்று சொல்லிவிட்டு இராமர் காலத்தில் ஜாதி இருந்தது என்று சொன்னால், அது எவ்வளவுப் பெரிய முரண்பாடு? எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்?
முரண்பாடு :8
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்த இராமாயணம், சமண இராமாயணத் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும் கோசலநாட்டு அரசன். கவுசலையும், கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது, கோசலை என்று அழைக்கப்பட்டாள். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரச குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது.
(விடுதலை 25-05-1961)
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துப்படி புத்த இராமாயணம், சமண இராமாயணம் முதலியவைகள்தான் முதலில் தோன்றியவை. அவைகளைப் பார்த்துதான் பின்பு வால்மீகி மாற்றிவிட்டான் என்றாகிறது.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
முதலில் தோன்றியது வால்மீகி ராமாயணம்தான். இதைப் பல அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.
rama01 
இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்த இராமாயணம், சமண இராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
எனக்கு புத்த இராமாயணம் கிடைக்கவில்லை. ஆனால் சமண இராமாயணம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதில் தசரதன் பெற்றோர்கள் பற்றியும் கவுசலையின் பெற்றோர்கள் பற்றியும் என்ன சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா? இதோ!
தசரதன் தந்தை அரண்யன்
கவுசலையின் தந்தை கெளசலன், தாய் அமிருதப்பிரபா.
நூல்: ஜைன ராமாயணம்
மூலம்: இரவிசேனாச்சாரியார், தமிழில் -தத்துவ மேதை கஜபதி ஜைன்
வெளியீடு – ஜைன இளைஞர் மன்றம்.
ஆகவே தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். சமண இராமாயணத்தைப் பார்த்தால் தெரியும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுவது சுத்தப்பொய்யாகும்.
முரண்பாடு : 9
தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்த முறை அரச குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம்?
இராமாயணம் நடந்த கதை என்பதுதானே!
இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இரந்த காரணத்தால்தான் சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்த முறை அரச குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுவதிலிருந்து அவரே இராமாயணம் நடந்த கதை என்று ஏற்றுக்கொள்கிறார்.
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன கூறுகிறார்?
இராமாயணம் நடந்த கதை அல்ல என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?
ஈ.வே. ராவின் இராமாயணம் பற்றி அவரது சீடர்!
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ”இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் – ஒரு மதிப்பீடு” எனும் தலைப்பில் முனைவர் ப. கமலக்கண்ணன் அவர்கள் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சி எவ்வளவு உண்மையில்லாதது என்று விளக்குகிறார்.
முனைவர் ப. கமலக்கண்ணன் என்ன கூறுகிறார் என்பதை சற்றுப்பார்ப்போம்.
… ”பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டப இந்த இராமாயணத்தைப் பற்றிப் பெரியார் அதிகமாகக் கருத்துகள் கூறியிருந்தாலும் மேலோட்டமான ஆய்வாகவே இருக்கிறது. ”
… ”பெரியார் பேச்சு வழக்கில் சில கருத்துக்களை மக்களுக்கு எடுத்துவைத்தவைகளை இராமாயணப் பாத்திரங்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட இந்த நூலில் இராமனைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் கூறுகின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.
இராவணன் மகா கல்விமான், வேத சாஸ்திர விற்பன்னன், தைரியசாலி, மிகுந்த பக்திமான், அநேக வரங்களைப் பெற்றவன் என்று கூறும் பெரியார் இராவணனின் செயல்கள் தமது கொள்கைகளுக்கு முரணாக உள்ளதைக் கண்டுகொள்ளவில்லை. இராவணன் திராவிடன் என்று கூறி இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிறைகளை மட்டும் உயர்த்திக் காட்டித் தமது ஒரு சார்பான நிலையைக்காட்டுகிறார். ”
…. ”இராவணனை இடித்துரைக்கின்ற காரணத்திற்காகவே கும்பகர்ணனைப் பற்றிப் பெரியார் கண்டுகொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பெரியார் அடிப்படையில் ஓர் ஆராய்ச்சியாளர் அல்லர். ”
… ”வசிட்டன் என்றால் இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். இவன் சூரியகுல அரசர்க்குக் குருவும் மந்திரியும் ஆகின்றவன் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் வசிட்டரைப் பெரியார் புரோகிதன் என்ற முறையிலேயே காண்கிறார்.
இராமாயணத்தில் இவர் பிரமனை நிகர்த்தவன் என அறிமுகம் செய்யப்படுகிறார். இருந்தாலும் இவர் வைத்த முகூர்த்த நேரம் சரியில்லாததால் இராமன் வனவாசம் போக நேர்ந்தது என்று பெரியார் கருதுகிறார். இந்தக் கருத்து பகுத்தறிவாளரான பெரியாரின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது. சடங்கு, சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கையில்லாத பெரியார் வசிட்டர் குறித்த நேரம் சரியில்லை என்று கூறுகிறார். வசிட்டர் ஆரியர் என்பதால் பெரியாரின் கருத்து நடுநிலை தவறிவிட்டதாக எண்ணலாம். ”
இவரது கருத்துக்களில் பெரும்பாலும் அடிப்படைச் சான்றுகளே இல்லாத ஒரு நிலையைக் காணமுடிகிறது. ஆராய்ச்சிக்கு அடிப்படையான வரையறை இல்லாமல் மேலோட்டமாகவே அமைந்துள்ளது. ”
… ”இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறது என்று அடிப்படையற்ற ஒரு காரணத்தை எடுத்துரைக்கிறார். ”
… ”எண்ணற்ற பண்புகளைக் கொண்ட இலக்குவனிடம் குறைகளோடு நிறைகளும் உண்டு என்பதைப் பெரியார் ஓப்புக்கொள்வதாகத் தெரியவில்லை. ”
இதுபோல் இராமாயணத்தைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்து முழுவதுமே முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளது.
முரண்பாடு : 10
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்.
(இராமாயணக் குறிப்புகள் -பக். -3)
அதே புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.
(இராமாயணக் குறிப்புகள் – பக். -5)
தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்பன இராமாயணத்தில் வரையறுக்கப்படவில்லை.
(இராமாயணக் குறிப்புகள். பக்.. 5)
தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லாதபோது திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படி சொல்ல முடியும்?
தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்று வரையறுக்ககப்படாதபோது நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர் என்று சொல்வது பொய் அல்லவா?
முரண்பாடு : 11
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
”சேலத்தில் மதுவிலக்கு செய்வதற்காகக் கோவையில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடுவது நியாயமா? ஐந்து, ஆறு லட்சம் குடிகாரர்களைக் காப்பாற்றுவதற்கு என்று நான்கு கோடிக்கு மேற்பட்ட மக்களிடமிருந்து பல வரியைக் கசக்கிப் பிழிவது நியாயந்தானா? நான் இப்படிச் சொல்வதால் மதுவிலக்கை எதிர்க்கின்றேன் என்று சனங்கள் எண்ணிக்கொள்ளக்கூடாது. நான் மதுவிலக்கை திடமாக ஆதரிக்கிறேன். மதுவிலக்கு பல தடைவை சிறை சென்றிருக்கிறேன். ”
(விடுதலை 24-07-1939)
அதாவது நான் மதுவிலக்கை திடமாக ஆதரிக்கிறேன். மதுவிலக்குக்கு பல தடைவை சிறை சென்றிருக்கிறேன் என்றெல்லாம் பெருமையாகக் கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
”பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் ரு முட்டாள்தனமான போராட்டமேயாகும்”
(விடுதலை 09-11-1968)
எப்படிப்பட்ட முரண்பாடு என்று பாருங்கள். சினிமா பார்ப்பதை விட கள் குடிப்பதே மேல் என்று சொன்னவர்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர்.
மக்கள் கள்குடித்து சாகக்கூடாது என்பதற்காக தன் தோப்பிலுள்ள 500 தென்னை மரங்களை வெட்டினார் என்றெல்லாம் அவரைப் பற்றி பருமையாகக் கூறுகிறார்கள். ஆனால் இங்கே ஒன்றைக் கூறவிரும்புகிறேன்.
வீரமணியிடம் ஒருவர், கள் குடிப்பதை எதிர்த்து தென்னை மரங்களை வெட்டிய பெரியார் மதுவிலக்கை எதிர்த்தது முரண்பாடல்லவா என்று கேட்கிறார். அதற்கு வீரமணி, ”அப்போது பெரியார் காங்கிரசில் இருந்தார். காங்கிரசின் கொள்கையை-திட்டத்தை செயல்படுத்தவே மரங்களை வெட்டினார். அது அவர் கொள்கை அல்ல” என்று கூறினார்.
அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் மக்கள் கள் குடித்து சாகக்கூடாது என்பதற்காக தன் தோப்பிலுள்ள 500 தென்னை மரங்களை வெட்டவில்லை. மாறாக காங்கிரஸ் சொன்னதால்தான் மரங்கள் வெட்டப்பட்டது என்பதை வீரமணியே ஒத்துக்கொள்கிறார். பின் எதற்காக 500 தென்னை மரங்களை வெட்டினார் என்று பெருமையாகப் பறைசாற்றுகிறார்கள்?
இதுபோன்ற முரண்பாடுகள் பலவற்றைச் சுட்டிகாட்ட முடியும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் இடத்திற்கு ஏற்றாற்போல் தன்னுடைய பேச்சை மாற்றி மாற்றி பேசுபவர். உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு கிடையாது. பொய் சொல்லியாவது தன்னுடைய கருத்தை உண்மை என்று நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர். அவருடைய முரண்பட்ட கருத்துகள் ஒருபுறம் வைத்துக்கொள்வோம். இனி ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றுப் பொய்களைப் பார்ப்போம்.
வரவாற்றுத் திரிபு : 1
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
”கடவுளைப் பற்றி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்னார் புத்தர், பச்சையாகக் கூட சொல்லவில்லை நம்பிவிடாதீர்கள், சிந்தியுங்கள் என்று சொன்னார். கடவுள் நம்பிக்கைக்காரப் பசங்க அவனை என்ன செய்தார்கள்? வெட்டினார்கள். வெட்டி, வெட்டித்தலையை ஒரு பக்கம் முண்டம் ஒரு பக்கம் குவித்தார்கள். இப்படி வெட்டியதும், குவித்ததும் கோயிலில் இன்னும் சிற்பமாக இருக்கிறது.
(நூல்:- தந்தை பெரியார் இறுதிப் பேரூரை 19-12-1973)
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்தப் பேச்சு உண்மைதானா? இல்லவே இல்லை.
டாக்டர் அம்பேத்கர் ”புததரும் அவரத தம்மமும்” என்ற நூலில் கூறுகிறார்:-
”இரவின் மூன்றாம் சாமத்தில், முன்னமே அறிவித்திருந்தபடி புனிதர் புத்தர் பரிநிப்பானமடைந்தார்”
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 22
(தமிழ் மொழிபெயர்ப்பு)
புத்தனை வெட்டினார்கள் ஆத்திகர்கள் என்று சொல்கிறார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். ஆனால் அம்பேத்கரோ, புத்தர் முன்னரே அறிவித்து பரிநிர்வாணமடைந்தார் என்று கூறுகிறார்.
இதில் யாருடையது உண்மை? ஈ.வே. ராமசாமி நாயக்கர் நிறைய படித்தவர் அல்ல. ஆராய்ச்சியாளரும் அல்ல. ஆனால் அம்பேத்கரோ நிறைய படித்தவர் ஆராய்ச்சியாளர். அதனால் அம்பேத்கர் சொல்வதைத்தான் நாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஆகவே ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆத்திகர்களின் மேல் உள்ள பொறாமையால் ஆத்திரத்தினால் – நாத்திகர்களுக்கு ஆத்திகர்மேல் கோபம் வரவேண்டும் என்பதற்காகவே வரலாற்றில் நடந்த சம்பவத்தை திரித்துச் சொல்லியிருக்கிறார். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வரலாற்றுப் பணி! கோயிலில் சிற்பம் இருக்கிறது என்று சொன்னால் எந்த கோயில் என்று சொல்லவேண்டாமா? இது தான் ஆதாரமா?
வரலாற்றுத் திரிபு : 2
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார் :-
பவுத்தத்திற்கு அநேக உண்மை ஆதாரங்கள் உண்டு. புத்தர் பிறந்தார் என்பதற்கும் அவர் என்ன கூறினார் என்பதற்கும் சரித்திர ஆதாரம் உண்டு. வருடம், மாதம், தேதி முதல் சரித்திர வாயிலாகக் காணமுடியும்.
(விடுதலை 20-02-1955)
ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதில் ஒன்றே ஒன்றுதான் உண்மை. அதாவது புத்தர் பிறந்தார் என்பது மட்டுமே. அதுகூட மாதம், தேதி என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல புத்தர் என்ன கூறினார் என்பதற்கும் சரித்திர ஆதாரம் இல்லை. அவருடைய சீடர்கள்தான் பல நூல்களை எழுதியிருக்கின்றனர். அதில் கூட ஒருவர் ஒருவிதமாகவும், மற்றொரு விதமாகவும் புத்தருடைய கொள்கைகளை விளக்கியிருக்கின்றனர். மாதம், தேதி, புத்தர் என்ன கூறினார் என்பதற்கு சரித்திர ஆராய்ச்சி இல்லாதபோது, இருக்கிறது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்கிறார் என்றால் அது வரலாற்றுப் பொய்தானே!
வரலாற்றுத் திரிபு :3
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார் :-
இந்நாட்டில் வெள்ளைக்கார அரசாங்கமும், முகமதிய அரசாங்கமும் இல்லாத காலத்தில்தான் சம உரிமை, ஜீவகாருண்யம் ஆகியவைகளை கொள்கைகளாகக் கொண்ட பவுத்தமதம் அழிக்கப்பட்டது.
(குடியரசு 24-03-1929)
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த கூற்றுப் பற்றி டாக்டர் அம்பேத்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?
”இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் முசல்மான்களின் படையெடுப்புகள் என்பதில் ஐயம் இருக்கமுடியாது. ‘புத்’ தின் எதிரியாகவே இசுலாம் வெளிப்பட்டது… இசுலாம் பவுத்தத்தை இந்தியாவில் மட்டுமல்ல, தான் பரவிய இடத்தில் இருந்தெல்லாம் ஒழித்துவிட்டது. ”
(பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியம் – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் எத்தும் பேச்சும் தொகுதி 3)
பவுத்த குருமார்கள்மேல் இசுலாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகள் அத்தகையதாக இருந்தது. அடி மரத்திலேயே கோடாரி வைக்கபட்டுவிட்டது. ஏனெனில் புத்ததுறவிகளைக் கொன்றதன் மூலமே புத்தத்தைக் கொன்றுவிட்டது இஸ்லாம். இதுதான் இந்தியாவில் புத்த சமயத்துக்கு நேர்ந்த மாபெரும் பேரழிவாகும்.
(பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்: தொகுதி 3)
இப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாறு என்ற பெயரில் பல திரிபுகளை மக்களிடத்திலே திரித்திருக்கிறார்.
வரலாற்றுத் திரிபு : 4
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
”சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக்காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்க வந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும் பிறராலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு அடக்கி மிருகமாய் நடத்தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ”
(நூல் ”திராவிடர் ஆரியர் உண்மை)
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த வரலாற்றுப் பொய்யையும் டாக்டர் அம்பேத்கரே உடைக்கிறார். அவர் கூறுகிறார்:-
”ஆரியர்கள் என்பது ஒரு தனி இனம் அல்ல, ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை”
(நூல்:- சூத்திரர்கள் யார்?)
வரலாற்றுத் திரிபு : 5
”திருமணம் என்பதே கிரிமனல் குற்றமாக வேண்டம் என்று சொல்லி வருகிறேன். நான் மனுதர்மத்தை நல்லவண்ணம் படித்திருக்கிறேன். அதில் சூத்திரனுக்குத் திருமணமே கிடையாது; எனக்குத் தெரியும்”.
(விடுதலை 11-10-1967)
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த உண்மைக்கு மாறான செய்தியை அவர்களின் திராவிடர் கழக வெளியீட்டை வைத்தே நிரூபிக்கலாம். திராவிடர் கழகம் சமீபத்தில் அசல் மனுதரும சாஸ்திரம் -(1919 பதிப்பில் உள்ளபடி) நூலை வெளியிட்டிருக்கிறது. அதில் மூன்றாவது அத்தியாத்தில் ‘கிறகஸ்த தர்மம்’ என்ற தலைப்பில், 13-வது சுலோகம் சொல்கிறது.
சூத்திரனுக்குத் தன் சாதியிலும், வைசியனுக்கு தன் சாதியிலும் சூத்திரச் சாதியிலும், க்ஷத்திரியனுக்கு தன் சாதியிலும், வைசியசூத்திர சாதியிலும், பிராமணனுக்கு தன் சாதியிலும், மற்ற மூன்று சாதியிலும் விவாகஞ்செய்து கொள்ளலாம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? சூத்திரன் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுதானே! நான் மனுதர்மத்தை நல்லவண்ணம் படித்திருக்கிறேன். அதில் சூத்திரனுக்குத் திருமணமே கிடையாது; எனக்குத் தெரியும்” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வது எவ்வளவு உண்மைக்கு மாறான செய்தி என்பது நமக்குப் புலப்படுகிறதல்லவா!
இப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு சாரார் மீது வெறுப்புக் கொண்டு வரலாற்றிலே நடக்காதவைகளை எல்லாம் நடந்தது போல, கற்பனைகளைச் சேர்த்து வரலாற்றைத் திரித்து உண்மைக்கு மாறானச் செய்திகளைச் சொல்லுகின்ற இவரா பெரியார் என்றுக் கேட்கத் தோன்றுகிறதல்லவா!
ஈ.வே. ராவைப் பற்றி ப. ஜீவனாந்தம்!
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முரண்பாடுகளை கம்யூனிஸ்ட்வாதியான ப. ஜீவானந்தம் தோலுரித்துக்காட்டகிறார். இதோ!

1. ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் சமதர்ம விரோதிகளான ஆர். கே. சண்முகம், ஏ. ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈ.வே. ரா.
2. சுயமரியாதை இயக்கத்தின் அரசியலுக்காக சமதர்மக் கட்சி வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஜஸ்டிஸ் கட்சிக்குத் திரும்பவும் ஓடினார் ஈ.வே. ரா.
3. ஜமீன்தார் – அல்லாதார் மகாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று பாராட்டி, பொப்பிலி தலைமையைப் புகழ்ந்தார் ஈ.வே. ரா.
4. லேவாதேவிக்காரர் – அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக்காரர்களெல்லாம் ஓழியவேண்டுமென்று சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக்குலாவினார் ஈ.வே. ரா.
5. மதங்களெல்லாம் ஒழியவேண்டுமென்று விருதுநகர் மாகாகண சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதன்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்று பிரசாரம் செய்தார் ஈ.வே. ரா.
(நூல் : ஈரோட்டுப் பாதை சரியா?)
இதுபோன்ற முன்னுக்குப்பின் முரணான வகையில் நடந்துக் கொள்வதும் முன்னுக்குப்பின் முரணான வகையில் பேசுவதும் வரலாற்றைத் திரித்துக் கூறுவதிலும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான்.
– தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக