Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

27 டிசம்பர் 2011

பகவத் கீதை பாரதத்தை இணைக்கிறது


இந்த நாள் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
ஆங்கிலத்தில்: தருண் விஜய் 
தமிழாக்கம்: லா.ரோஹிணி 
நம்முடைய தலைவர்களான ஜோஷி, ஹுக்கும் தேவ் நாராயண்ஜி  ஆகியோரை ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாராட்டும் போது, லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், மகாதாப், காங்கிரஸ் தலைவர்கள் அருண் குமார், பவன் பன்சல் ஆகியோரையும் நான் பாராட்டிப்  பேசினேன். அதைக் கேட்டு பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் ஆச்சர்யம் ஏற்பட்டது. நான் குறிப்பிட்டவர்கள் அனைவருமே ஒரே குரலில், ரஷ்யாவில் பகவத் கீதைக்குத்  தடை விதிக்கக் கூடாது என்று பேசினர். எனவேதான் இது போன்ற தேசியப் பிரச்சனைகள் ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு, ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு மட்டுமே  கவலை தருவதாக இருக்ககூடாது என்று நான் குறிப்பிட்டேன். இத்தகைய தேசிய பிரச்சனைகள் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே கவனத்திற்கு உரியதாகும்.இந்த நாள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். ஏன் என்றால் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு “ரஷ்யாவில் பகவத் கீதையை” தடை செய்யும் விஷயத்தில் எல்லா கட்சிகளுமே ஒன்றுபட்டு நின்றனர். இதில் விதி விலக்காக தனித்து நின்றது “இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட்கள்” மட்டுமே. 
இது வெறும் ஒரு “ஹிந்து பிரச்சனையாக” இருக்கவில்லை. தேசத்தின் கெளரவம்,தேச மக்களின் கெளரவம், இந்தியாவின் நாகரீகப்  பாரம்பரியம் கீதை வாயிலாக உலகிற்கு பாரதம் கொடுத்த மிக சிறந்த அன்பளிப்பான கலாச்சார மூல்யங்கள் என அனைத்தையுமே  தோண்டிப் புதைக்கும் விதத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை அமைந்துள்ளது. .கர்மா என்னும் விஞ்ஞான பூர்வமான கோட்பாடு, பலவகை வாழ்க்கைமுறை ஒரு குணக்குன்றான சமூகம் அமைய, பாரத நாடு கொடுத்துள்ள  சகோதரத்துவம் நிறைந்த கோட்பாடுகள் என அனைத்துக்குமே ஆபத்து வந்துள்ளது. இம்மாதிரி சூழ்நிலையில் இந்தியா ஒரே குரலில், ஒரே மக்களாக, ஒரே மாதிரியாகக் கிளர்ந்து எழுந்தது. எனவே இந்த நாள் இனிய நாள். பெருமைக்கு உரிய நாள்.
நம்முடைய சரித்திரத்தில் இந்த நாள் ஒரு பொன்னாள் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடட்டும். இந்த நாளில் எல்லா வேற்றுமைகளும் களையப்பட்டு, இந்தியாவின் நூலான பகவத் கீதையின் பால் ஒருமை உணர்வு வெளிக்காண்பிக்கப்பட்டது. எனவே இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்.
ரஷ்யாவில் பகவத் கீதாவை தடை செய்ய முயற்சிப்பதைக் கேட்டு பாரத மக்கள், சினம் கொண்டார்கள். வேதனைக்கு ஆட்பட்டார்கள். டிசம்பர் 19 இல் நாடாளுமன்றத்தில் லாலு பிரசாத், சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் , அருண் குமார் போன்றவர்கள் வெகு மிகத் தெளிவாக பாரத மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திப்  பேசினர். எனவே இந்த நாள் ஒரு பொன்னாள்.
பிஜூ ஜனதா தளம் கட்சியைச்  சேர்ந்தபார்துஹாரி மகாதாப் இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். உடனே நாடாளுமன்றம் இப்பிரச்சனை பற்றி விவாதம் செய்ய எடுத்துக் கொண்டது. மகதாப் தன்னுடைய “சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பின் வருமாறு குறிப்பிட்டார் “
ரஷ்யாவில் உள்ள ஹிந்துக்களின் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விநோதமாக ரஷ்யாவின் வக்கீல் பகவத் கீதையை தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்துமாறு, தோம்ஸ்க் “டோம்ச்க் மாநில பல்கலைக் கழகத்தைக்” கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இப்பல்கலைக் கழகம் இப்பணியை மேற்கொள்ள தகுதி உடையது அல்ல. சரித்திரத்தை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இப்பல்கலைக் கழகத்தில் இல்லை. இந்திய தேசத்தின் கலாச்சாரம், மொழிகள், இலக்கியங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தறிந்து கொள்ளும் நிபுணத்துவம் கொண்டவர்கள் அப்பல்கலைக் கழகத்தில் இல்லை. பகவத்கீதைக்கு எதிரான இந்த வழக்கில் “மதப்  (கிருஸ்துவ மத) பாரபட்சம் உள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு பெரும்பான்மை மதக்குழுவினர்  சகிப்புத்தன்மை அற்று இந்த வஷக்கை தொடுத்துள்ளனர். எனவே ரஷ்யாவில் உள்ள ஹிந்துக்களின் மத வழிபாட்டு உரிமைகளை, அவர்களின் நம்பிக்கைகளைப் பாதுகாக்க ரஷ்ய அரசை வலியுறுத்த வேண்டுமென நான் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பகவத்கீதை வெறுப்பை போதிக்கவில்லை. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு  ஆவன செய்ய வேண்டும்.” இவ்வாறு பிஜூ ஜனதா தளம் உறுப்பினர் ஆணித்தரமாக பேசினார். எனவே இது ஒரு பொன்நாள் தானே?
லாலு பிரசாத் யாதவ் இது விஷயமாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினார். ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறித்தினார். லாலு கூறியதை முரளி மனோகர் ஜோஷியும், ஹரேன்பதக்கும் ஆதரித்து பகவத்கீதையை தடை செய்யும் விஷயம் குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர். உறுப்பினர்கள்  விவாதம் வேண்டும் என்று கேட்ட போது கொந்தளிப்பான காட்சிகள் நிகழ்ந்தன. இதனால் சபாநாயகர் மதியம் 2 மணி வரை சபையை ஒத்தி வைத்தார். அதன் பிறகு விவாதம் நடைபெறும் என அவர் உறுதி அளித்தார்.
இவ்விஷயத்தை முதலில் எழுப்பிய முலாயம்சிங் யாதவ் மிகவும் போற்றத்தக்க விதத்தில் பேசினார். அவர் தனது உரையில், “பகவத் கீதா உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, உலகிற்கு சொந்தமான ஒரு புத்தகம். கீதை ஒரு மனிதன் சிறந்த மனிதன் ஆவதற்கு வழி காட்டுகிறது. கீதை சமூகத்தின் நன்மைக்கு வழி காட்டுகிறது. ஒரு புனிதமான வாழ்வை எவ்வாறு வாழ்வது என்பதையும், நேர்மையாக வாழ்வதையும் கீதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். காந்திஜி கீதையை தினமும் படிப்பதை வஷக்கமாக கொண்டிருந்தார். அவருடைய சொற்பொழிவுகளில் பெரும்பாலானவை  கீதையின் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அமைந்து இருந்தன. நம்முடைய நாட்டை கீதையின் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்க அவர் விரும்பினார். ஆனால் இந்த அரசு கீதையை விசேஷமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த உண்மையை எல்லா கட்சிகளுமே ஏற்றுக் கொள்வார்கள். கீதையை நாட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்ய இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது விஷயமாக அரசு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது ஆரம்ப கல்வியில் இருந்து கல்லூரி படிப்பு வரை கீதையின் கோட்பாடுகளை கொண்டு செல்ல முடியும். சபாநாயகர் அவர்களே! எதாவது செய்து நம்முடைய மாணவர்கள் கீதையை படிக்குமாறு செய்யுங்கள். இது நடக்கும் போது காந்திஜியின் கனவு நனவாகும். மக்கள் கீதையின் மையக் கருத்தை புரிந்து கொள்வார்கள். அதன் மூலம் நம்முடைய நாடு இன்னும் சிறந்த நாடாக மாறும். சைபீரியாவின் அட்டர்னி கீதாவை குறித்து பேசியதை அனைவரும் கண்டிக்க வேண்டும். பகவத் கீதையை குறித்து அவர் பேசியதை இந்த முழு அவையும் கண்டிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்”. என்று வலியுறித்தினார்.
இதன் பிறகு லாலு பிரசாத் யாதவ் பேசினார். அவர் தனது உரையில், பகவத் கீதையை அவமதிப்பது இறைவன் கிருஷ்ணனை அவமதிப்பதற்கு நிகராகும். இறைவன் கிருஷ்ணருக்கு எதிராக மிகப் பெரிய சதி நடக்கிறது. கீதாவின் செய்தியில் இருந்து உற்சாகம் பெற்றே அரசியல்வாதிகள் தங்களுடைய வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். பாராளுமன்றம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவின் அரசாங்கம் பகவத் கீதையை தடை செய்வதைக் குறித்து நம்முடைய அரசிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. நம்முடைய அரசு மௌனம் சாதித்துக் கொண்டுள்ளது. இதை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. முழு அவையின் சார்பாக ரஷ்ய அரசின் செயலை நான் கண்டனம் செய்கிறேன். கீதையைத்  தடை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த அவமதிப்புக்கு  நாம் பழி வாங்குவோம். இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அரசையும் நாங்கள் தண்டிப்போம். சமீபத்தில் நம் பிரதமர் ரஷ்யா சென்று வந்துள்ளார். ரஷ்ய அரசிடம் பகவத் கீதை தடை விஷயம் குறித்து நம் பிரதமர் பேசினாரா? பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் எதையும் நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதைத்தான்  நான் சொல்ல விரும்புகிறேன். ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு ஜெய் என்று அனைவரும் சொல்லுங்கள்”  இவ்வாறு லாலு பேசியதும் அவை முழுவதும் கரகோஷம் எழுப்பியது.
இதன் பிறகு பேசிய சரத்யாதவ் தனது உரையில், “இந்த விஷயம் கோடிக்கணக்கான மக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. பகவத் கீதையை தடை செய்வது என்னும்  பையித்தியக்காரத் தனத்திற்கு எதிராக அரசு உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் இந்த நாட்டு மக்களின் விருப்பம்.” என்று அவர் கூறினார்.
அருண் குமார் உண்டவல்லி ஆந்திரப் பிரதேசக் காங்கிரஸ் உறுப்பினர். முழு மனித சமூகத்தின் நன்மைக்காக கீதையின் கோட்பாடுகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் மிக சிறந்த சொற்பொழிவு  ஆற்றினார்.

அருண்குமார் காங்கிரஸ் எம்.பி.
கீதையின் பல ஸ்லோகங்களை தூய சம்ஸ்க்ருதத்தில் அவர் மேற்கோள் காட்டிப் பேசினார். இது அனைவரையும் மகிழ்ச்சி  வெள்ளத்தில் ஆழ்த்தியது.
உத்திராகண்ட மாநிலத்தைச்  சேர்ந்த சத்பால் மகாராஜ் அவை நடவடிக்கைகளின் தலைவராக இருந்தார். அவரும் கீதையின் பல ஸ்லோகங்களை மேற்கோள் காட்டிப் பேசினார். கீதையில் விவரிக்கப்பட்டுள்ள மனிதகுல மேம்பாட்டிற்கான உண்மைகளை அவர் விளக்கினார்.
அதன் பிறகு பா.ஜா.க.வைச்  சேர்ந்த ஹுக்கும்தேவ் நாராயண் பேசினார். அவருடைய பேச்சு மிகவும் கவரும் வகையில் அமைத்திருந்தது. ரஷ்யா பகவத் கீதையை தடை செய்வதை எதிர்த்து முழு அவையும் ஏகமனதாகத்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்த ஒற்றுமையைக் கண்டு தாலிபான் மயமாக்கப்பட்ட போலி மதசார்பின்மைவாதிகள் வாயடைத்துப் போயினர். திக்பிரமை பிடித்துப் போயினர். இந்த ஒற்றுமை அவர்களை வாய் பிளக்க வைத்துவிட்டது. இதில் ஏதாவது அரசியல் செய்ய முடியுமா? என்று அவர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் “ஹிந்து  ஒற்றுமைக்கு மேலாக” “யாதவ ஒற்றுமை” எழுந்து வருவதாக கூறினர். இதற்கு நான் வன்மையாக மறுப்பு தெரிவிக்கிறேன். இப்போது வெளிப்பட்டது ஹிந்து உணர்வின் சாராம்சமாகும். இந்தியாவின் வாழ்க்கை மூல்யங்கள் இப்போது வெளி வந்துள்ளன. இதை எந்த சுனாமியாலும் வீழ்த்திவிட முடியாது. இம்மாதிரி விஷயங்களில் ஏன் ஒரே ஒரு இயக்கமோ அல்லது சித்தாந்தமோ மட்டும் பேச அனுமதிக்கப் படவேண்டும்? அரசியல் செயல்பாடுகள் என ஆயிரம் விஷயங்களில் நமக்குள் வேற்றுமைகள் இருக்கட்டும். ஆனால் நம் அனைவரையும் இந்தியராக இணைக்கும் சில விஷயங்கள் உள்ளன.  நம்முடைய அரசியல் சட்டம் மற்றும் மூவர்ணக் கொடிக்கு அதுதான் மூலாதாரமாக உள்ளது.
உலகிற்கு இந்தியா அளித்த மிகச் சிறந்த நன்கொடை என்று ஒன்று இருக்குமானால் அது பகவத்கீதைதான். மராத்தியில் பகவத் கீதையை பற்றி வினோபா அவர்கள் மிக அருமையான ஒரு புத்தகம் எழுதியுள்ளார். துளசி ராமாயணம் எப்படி ஹிந்தி உலகில் பேரும் புகழும் பெற்று பிரசித்தியோடு உள்ளதோ அதே போன்று வினோபாவின் புத்தகமும் மராத்தி மொழியில் விளங்குகிறது. பகவத் கீதையை தடை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டு இருந்தன. அப்போது நம் பிரதமர் மாஸ்கோவில் இருந்தார். ஆனால் ரஷ்யாவின் எந்த உயர் அதிகாரிகளிடமும்  மன்மோகன் சிங்  இந்த விஷயம் குறித்துப் பேசவில்லை. உலகம் முழுவதிலும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா இன மக்களும் கீதையை படித்துள்ளனர். இப்பூவுலகில் பிறந்த மிகப்  புகழ் வாய்ந்த அனைவருமே கீதையின் உபதேசங்களில் இருந்து ஆக்கமும் ஊக்கமும் பெற்றுள்ளனர்!  இதற்கு மன்மோகன் சிங் மட்டும்தான் விதிவிலக்கோ?
இக்கட்டுரை டிசம்பர் 21 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும். http://blogs.timesofindia.indiatimes.com/indus-calling/entry/gita-unites-india-a-historic-day-in-our-history
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்து சங்க செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக